சென்னை: எந்திரன் திரைப்பட கதை விவகாரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என்று பத்திரிக்கையாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் எந்திரன். படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைப்புகள் அனைத்தும் தன்னுடையது. எனவே படத்தின் கதை தன்னுடையது தான் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் ரூ.1 ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இயக்குனர் ஷங்கர் தவிர்த்து வந்தார். அவர் தரப்பில் மனுக்கள் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் இன்றும் இயக்குநர் ஷங்கர் ஆஜராகவில்லை. ஆனால் அவரது தரப்பில் அவரின் மேலாளர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிகை வைக்கப்பட்டது.
ஆனால் சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். அத்துடன் கால அவகாசம் கோரும் இயக்குநர் ஷங்கருக்கு, வணிக நீதிமன்ற சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்த நீதிபதி அபராதத் தொகையை புளு கிராஸ் (BLUE CROSS) அமைப்பிடம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.