வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தைக் கைவிடுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டடது. இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக, பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டுச் செய்கிறவன், அந்தத் தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கின்றான் என்று நம்புபவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.
வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.