பாலு மகேந்திராவி மூடுபனி திரைப்படத்தில் மனநலக்குறைபாடு கொண்ட நாயகனாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகர் பிரதாப் போத்தன். அத்திரைப்படத்தில் இவர் கிடார் வாசித்துக் கொண்டே பாடும் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை அத்தனை எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. மூடுபனி மட்டுமல்ல நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, சிந்து பைரவி, மீண்டும் ஒரு காதல் கதை, கரையெல்லாம் செண்பகப்பூக்கள், வாழ்வே மாயம் என்று பிரதாப் நடித்த அருமையான திரைப்படங்களின் லிஸ்ட் நீள்கிறது.
நடிகராக மட்டுமல்ல ஒரு இயக்குனராகவும் பிரதாப் போத்தன் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கிறார். கமல் நடிப்பில் வெற்றி விழா, பிரபு நடிப்பில் ‘மை டியர் மார்த்தாண்டன், நெப்போலியனை வைத்து சீவலப்பேரி பாண்டி, ராம்கி மற்றும் ரகுமானை வைத்து ஆத்மா, சத்யராஜை வைத்து ஜீவா, மகுடம், எனச் சில திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
இவர் நடிக்க வந்த காலகட்டமும் 80 கள் தான். குறைந்த அளவிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பிரதாப் போத்தன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வாயிலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட தன்னை 80s நடிகர்களின் நட்சத்திர சந்திப்புக்கு அவருடன் அந்தக்காலத்தில் இணைந்து பணி புரிந்தவர்களான சக நடிகர், நடிகைகள் அழைக்கவில்லையே என்ற வருத்தம் பிரதாப் போத்தனுக்கு இருந்திருக்கிறது. அதையே அவர் தனது சமூக ஊடகப்பக்கத்தில் இவ்விதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
‘80 களில் நடித்தவர்களில் நான் ஆளுமையற்றவனாகி விட்டேன், நான் ஒரு மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கிறேன் போலிருக்கிறது, அதனால் தான் நட்சத்திர சந்திப்புக்கு என்னை அவர்கள் அழைக்கவில்லை. அதனால் நான் வருத்தமுற்றிருக்கிறேன்’
- என பிரதாப் போத்தன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக பிரதாப் போத்தனை இத்தனை வருத்தத்திற்கு உள்ளாக்கிய 80s நடிகர், நடிகைகளின் நட்புக் கூடல் அல்லது கெட் டுகெதர் இம்முறை நடிகர் சிரஞ்சீவியின் ஹைதராபாத் இல்லத்தில் வைத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் 80 களில் தென்னிந்திய சினிமாவைக் கலக்கிய நடிகர், நடிகைகளான மோகன்லால், சிரஞ்சீவி, பிரபு, ஜாகி ஷெராஃப், சுரேஷ், பானு சந்தர், நரேஷ், ஜெகபதிபாபு, ரமேஷ் அர்விந்த் உள்ளிட்ட பல நடிகர்களும் ராதிகா, சுஹாசினி, ஜெயசுதா, சுமா, அம்பிகா, ராதா, ஷோபனா, லிஸி, ஜெயப்ரதா, பார்வதி ஜெயராம், ரேவதி, பூர்ணிமா, அமலா, சரிதா, மேனகா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு தங்களது நட்பை நிலை நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் தனக்கு இடமில்லையே என்ற பிரதாப் போத்தனின் ஆதங்கம் நியாயமானதா? இல்லையா என்பதை 80S நடிகர், நடிகைகளுக்கான கெட் டுகெதரை ஒருங்கிணைத்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.