சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் குறிப்பிட்ட சாதியின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அந்த சின்னம் படத்திலிருந்து அகற்றப்பட்டது. மேலும் அதே சமுகத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் தான் ராஜா கண்ணுவுக்கு உதவியதாகவும் ஆனால் படத்தில் அது இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையும் படிக்க | ''தமனின் இசை பிடிக்கவில்லை'' : வேறு இசையமைப்பாளரை அணுகிய கதாநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் ராஜா கண்ணு கொலை வழக்கில் உண்மை வெளிவர போராடிய கோவிந்தன் என்பவர், ''நான் கம்யூனிஸ்ட் என்னை ஒரு குறிப்பிட்ட சாதி அரசியலுக்குள் சுருக்காதீர். உங்கள் சாதியினர் உழைக்கும் இடத்தில் எவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அதைப் பேசுங்கள். அதைவிடுத்து ஜெய் பீம் படத்தை வைத்தோ என் சாதியை தேடியோ அரசியல் நடத்தாதீர்கள்'' என்று குறிப்பிட்டிருப்பதாக செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இந்த செய்தியைப் பகிர்ந்த இயக்குநர் சேரன், இதான் உண்மையான கெத்து.. சிவப்பு சிந்தனைக்காரனுக்கெல்லாம் சாதி என்பது இல்லை. சாதி பார்த்தும் இயங்குவது இல்லை. எங்கள் ஊரில் ராமலிங்கம் அய்யா என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார். அவரும் இதையேதான் சொன்னார், செய்தார். மனிதனுக்கு மனிதன் உதவ, அவனுக்காக போராட சாதி தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.