நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், எனது வாழ்க்கை மாறியிருக்கும் என உருக்கம் படத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த ஜூன் 28ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்து நடிகை மீனா வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''உயிரைக் காப்பாற்றக்கூடிய சிறந்த விஷயம்தான் உடல் உறுப்பு தானம். என் கணவர் வித்யாசாகருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், எனது வாழ்க்கையே மாறியிருக்கும். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 8 உயிர்கள் வரைக்கும் காப்பாற்ற முடியும். இது உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கும், பலன் அடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் மட்டும் அல்ல. சம்பந்தப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களிடமும் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும். இதனால், நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவு செய்துள்ளேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.