அதிக மக்கள் திரையரங்குகளில் பார்த்த படம் - சூர்யவம்சம் குறித்து சரத்குமார் நெகிழ்ச்சி
சூர்ய வம்சம் திரைப்படம் அதிக மக்கள் திரையரங்குகளில் பார்த்த படம் என்ற சாதனையைக் கொண்டுள்ளதாக நடிகர் சரத்குமார் மகிழ்ச்சி தெரிவித்துளளார்.
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் கலக்கிய படம் சூர்ய வம்சம். கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 25வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.
இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும்வெற்றிபெற்றது. நகைச்சுவை, குடும்ப உறவுகள் என இந்தப் படம் 90களின் குழந்தைகளுக்கு விருப்பமான படமாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க | ரஜினியின் சாதனையை முறியடிப்பாரா கமல் ? வசூல் வேட்டையைத் தொடரும் விக்ரம்
Advertisement
இந்த நிலையில் சூர்யவம்சம் குறித்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய மிகப்பெரிய வெற்றிப்படமான சூர்ய வம்சம் படத்தில் பணிபுரிந்த நாட்களை நினைத்து பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படம் இதுவரை அதிக மக்கள் திரையரங்குகளில் பார்த்த படம் என்ற சாதனையைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டு திரையரங்குகளில் ஓடியது. இந்தப் படத்தை ஆதரித்த ரசிகர்கள், நலம்விரும்பிகளுக்கு நன்றி.
நீங்கள் எனக்கு அளித்த நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன். இனி கடினமாக உழைத்து இதுபோன்ற ஒரு வெற்றிப்படத்தை அளிப்பேன் என உறுதியளிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.