தொழில்நுட்பத்தை இப்படியா பயன்படுத்துவது?: ராஷ்மிகா உருக்கமான பதிவு!
இணையத்தில் வைரலான ஆபாச மார்பிங் விடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவினை எழுதியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
சமூக வலைதளங்களில் இன்று ராஷ்மிகா மந்தனா வைராலாகியுள்ளார். அவரது மார்பிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டதே இதற்கு காரணம். இதைப் பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் பதிவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்கள் மார்பிங் செய்வது எப்போதும் இருந்துவரும் அருவறுக்கதக்க செயலாக இருந்தாலும் தற்போது முற்றிலும் உண்மையாக இருப்பது போல போலியான ஒன்றினை உருவாக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி இப்படியான தீயப் பழக்கங்களுக்கு உபயோகிக்கப்படக் கூடாதென இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்த பிரபல நடிகை!
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது எக்ஸ் பதிவில், “இணையத்தில் பரவிய ஆபாச மார்பிங் விடியோவினால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் நான் மிகவும் பயந்தேன். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால் இது எனக்கு மட்டுமல்ல இணையத்தில் இருக்கும் யாவருக்கும் அச்சுறுத்தலானாது.
எனக்காக இன்று ஆதரவு தெரிவித்த எனது குடும்பத்துக்கும், எனது நண்பர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒருவேளை இது எனக்கு பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் நடந்திருந்தால் நான் எப்படி இதை எதிர்கொண்டிருப்பேன் எனத் தெரியவில்லை. இதுபோல மற்றவர்களும் பாதிக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க நாம் ஒரு சமூகமாக இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ஆதரவாக பதிவிட்ட அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.