தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் முற்போக்கானவர்கள்..! பா. ரஞ்சித் பெருமிதம்!
தங்கலான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் தமிழ் சினிமா ரசிகர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் நாளை (ஆகஸ்ட் 15) திரைக்கு வருகிறது. இதனால், இதன் புரோமோஷன் நிகழ்வுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து பல நேர்காணல்களில் கலந்துகொண்டனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற புரமோஷனில் இயக்குநர் பா. ரஞ்சித் கூறியதாவது:
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் முற்போக்கானவர்கள். கலைத் திரைப்படம், வணிக திரைப்படம் என எதையும் பிரித்து பார்க்கமாட்டார்கள். அனைத்தையும் வணிக சினிமாவாகவே பார்ப்பார்கள். இப்படி இல்லையென்றால் நானெல்லாம் இத்தனை படம் எடுத்திருக்கமுடியாது. இல்லையென்றால் நான் முதல் படத்திலேயே ஒதுக்கப்பட்டிருப்பேன்.
எனது அரசியலில் வேண்டுமானால் பார்வையாளர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் என்னுடைய திரைமொழி மக்களுக்கு பிடித்துள்ளது.
தங்கலானின் அக உலகம் எங்கெல்லாம் தொடர்புள்ளது அதன் மூலமாக அவனது விடுதலை குறித்தான படமாக இது இருக்கும். ஒரு வணிக சினிமாவில் கலைப் படைப்பை எவ்வளவு எதார்த்தமாக தர முடியுமோ அவ்வளவு முயற்சித்துள்ளேன். தங்கலான் ஒரு புது அனுபவமாக இருக்குமென நம்புகிறேன் என்றார்.