பிரதமர் மோடி வெல்வாரா? ரஜினி பதில்!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்.
அதற்கு முன் இமயமலை செல்கிறார். இதற்காக, வீட்டிலிருந்து சென்னை விமான நிலையம் கிளம்பிய நடிகர் ரஜினி, “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன். இந்த முறையும் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகைக்குச் செல்கிறேன்” என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது, பாடலின் வெற்றிக்குக் காரணம் இசைமைப்பாளரா? கவிஞரா? என்கிற விவாதத்தைக் குறித்து “இசையா, கவிதையா” எனக் கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, “அண்ணா, நோ கமண்ட்ஸ் (No comments) என்றார்.
“பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா?” எனக் கேட்டதற்கு, “மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்” எனப் பதிலளித்தார்.
விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம், ஆன்மீகம் குறித்து கேள்வி கேட்டனர். “இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஆன்மீகம் தேவை. ஆன்மீகம் என்றால் சாந்தியும் சமாதானமும்தான்” என்றார்.