சினிமாவில் 2 படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்! குவியும் வாழ்த்து!
அடுத்தடுத்து படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் ஸ்ரீதேவா.
பெரிய திரையில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் ஸ்ரீதேவா அடுத்தடுத்து 2 படங்களில் நாயகனாக நடிக்கிறார்.
அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை தொடர் இருந்து வருகிறது. இந்தத் தொடர் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னணியில் உள்ளது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இத்தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Advertisement
மனோஜ் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிகர் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவர், இந்தத் தொடரில் அப்பாவித்தனம், கோபம், நகைச்சுவை கலந்து பன்முகத்தன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இதனால், இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் துணிவு, அதர்மக் கதைகள் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீதேவா, வசூல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கன்னக்கோல் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வேல் குமரேசன் வசூல் மன்னன் என்ற புதிய படத்தை இயக்குகிறார். இப்படம் நகைச்சுவை பாணியில் எடுக்கப்படுகிறது. நாயகியாக நிவேதா நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரணி இசையமைத்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி குட்டிப்புலி சரவண சக்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வசூல் மன்னன் படம் இந்த மாதம் வெளியாகிறது.
இந்த நிலையில், ஓடிபி என்ற புதிய படத்தில் நடிகர் ஸ்ரீதேவா நடிக்கிறார். நாயகியாக பவித்ரா ஐயர் நடிக்கிறார். ஃபரூக் அப்துல்லா இயக்கி தயாரிக்கிறார்.
அடுத்தடுத்து 2 புதிய படத்தில் நடித்து வரும் ஸ்ரீதேவாவுக்கு சின்ன திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.