தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்! டிஆர்பி பட்டியல் வெளியீடு!
சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியானது குறித்து...
தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், சன் தொலைக்காட்சியின் தொடர்கள் அதிக இடங்களைப் பிடித்துள்ளன.
சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் எது அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்பதை டிஆர்பி புள்ளிப் பட்டியல் மூலம் அறிந்துகொள்ளலாம். இப்பட்டியலில் பெரும்பாலும் பிரைம் டைம் எனப்படும் மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்களே இடம்பெறுகின்றன. அந்தவகையில் இந்தமுறையும் மாலை நேரத் தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதில் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதல் 4 இடங்களில் உள்ளன. 5வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது.
Advertisement
சிறகடிக்க ஆசை
சின்ன திரை டிஆர்பி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. இத்தொடர், திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கோமதி பிரியா - வெற்றி வசந்த் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
எளிய மக்களின் குடும்பப் பிரச்னைகளை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், பலரால் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது. இதனால் இத்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கயல்
4வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்த கயல் தொடர் தற்போது 4வது இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் 2
3வது இடத்தில் எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. திருச்செல்வம் இயக்கும் இத்தொடரில் நடிகைகள் பார்வதி, தேவதர்ஷினி, ஹரிபிரியா இசை, ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு திருமணமாகிச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. நவீன பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இத்தொடரில் காட்டப்படுகிறது. இதனால் இளம் தலைமுறையினரையும் எதிர்நீச்சல் -2 கவர்ந்துள்ளது.
மூன்று முடிச்சு
2வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். பிரீத்தி சஞ்சீவ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் இத்தொடரைத் தழுவி தொடர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் தொடராக உள்ளது.
சிங்கப் பெண்ணே
முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இயக்குநர் தனுஷ் இயக்கும் இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மணீஷா மகேஷ் நாயகியாகவும் அமல்ஜித், தர்ஷக் கெளடா நாயகர்களாகவும் நடிக்கின்றனர்.
கிராமத்தில் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து நகரத்திற்கு வரும் இளம்பெண் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
வேலைக்காக நகரங்களில் தங்கிப் பணிபுரியும் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளையும் அவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு உதவும் உணர்வுப்பூர்வமான மனிதர்களையும் பாத்திரங்களாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.