இந்த முறை மக்களவைத் தேர்தலில் வேறெந்த பணி செய்பவர்களைக் காட்டிலும், மருத்துவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கட்சிகள் பலவும் மருத்துவ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முக்கியக் கட்சிகளின் மருத்துவ வேட்பாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது, மேலும் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 10 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் டாக்டர் என்ற அடையாளத்தோடு தேர்தலில் குதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 31.
விசேஷமாகக் கூறுவது என்றால், ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்ட கட்சியான பாமகவின் 7 வேட்பாளர்களில் 4 பேர் மருத்துவர்கள். தருமபுரி தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட 4 பேரும் மருத்துவர்களாவர்.
20 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவில் 3 பேர் மருத்துவர்கள். கலாநிதி வீராசாமி, செந்தில் குமார், கௌதம் சிகாமணி ஆகியோர் மருத்துவர்கள்தான்.
அதிமுகவிலும் 2 மருத்துவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பி. வேணுகோபால், ஜெ. ஜெயவர்தன் ஆகியோர் மருத்துவர்களாவர்.
தேமுதிகவின் 4 வேட்பாளர்களில் ஒருவரான வி இளங்கோவன் மருத்துவர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவர்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்த விஷயம்தான்.
ஆரணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் செல்லகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் லோகநாதன் (திருவள்ளூர்), சுதாகர் (திண்டுக்கல்), சுப்ரமணியன் (புதுச்சேரி) ஆகியோரும் மருத்துவர்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு மருத்துவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கழக பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில், அதிகம் படித்தவர்கள் குறிப்பாக மருத்துவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் என அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை காணப்படவில்லை. மாநிலத்தில் கல்வித் தரம் உயரும் போது அது அரசியலிலும் எதிரொலிக்கிறது என்கிறார்.