"தன்வினை தன்னைச் சுடும்" என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபத்தில் அதை உணர்ந்தேன்.
இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபட்ச சகோதரர்களின் நிலைமை இன்று மிகவும் மோசமாக இருக்கிறது. அதிபர் மாளிகையை நோக்கியே மக்கள் திரண்டுவிட்டனர். இது எப்படி என்றால், பிரஞ்சுப் புரட்சியில் மேரி அண்டாய்னட்டை எதிர்நோக்கி மக்கள் சென்றது போல, சிங்கள மக்களே அந்த அதிபர் மாளிகையை நோக்கிச் சென்றது வேடிக்கையாக இருக்கிறது.
அதேபோல, தனக்குத் துணை நின்றவர்கள், தனக்கு உதவியவர்கள், தனக்கு ஏணியாக நின்றவர்களுடைய வாழ்க்கையைப் பாழ்படுத்திய மனிதனுடைய இன்றைய காலத்தையும் பார்க்கிறோம். எப்படியும் இயற்கையின் நீதி என ஒன்று இருக்கிறது. தன் வினை தன்னைச் சுடும் என்பது நிரூபணம்.
இதையும் படிக்க: எரியும் இலங்கை: கடனால் சூழ்ந்த லங்கா; நேரடி ரிப்போர்ட்- 10
இலங்கையை மீட்டவர் கோத்தபய ராஜபட்ச என்று புகழ்ந்த பெளத்த, சிங்கள மக்கள் இப்போது அந்த கோத்தபய ராஜபட்சவிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டத்தைக் கட்சிகள், தரப்புகள் கடந்து ஆரம்பித்திருக்கின்றனர்.
மிரிஹானவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபட்சவின் வீட்டுச் சுற்றாடலில் திரண்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம் அதைத்தான் கூறுகிறது. ராஜபட்சக்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி பீரிட்டுக் கிளம்பத் தொடங்கியிருக்கிறது.
நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் பல இடங்களிலும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில் அதற்கிடையில் இளைஞர், யுவதிகள் தாமாக ஒன்று திரண்டு அதிபர் இல்லத்தை நோக்கி இந்தப் போராட்டத்தை அதிரடியாக ஆரம்பத்திருக்கிறார்கள்.
‘தடி எடுத்தவன் தடியால் அழிவான்’ என்பார்கள். பெளத்த, சிங்களப் பேரினவாத வெறியைக் கிளப்பி, அந்த வெறி எழுச்சியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கோத்தபய ராஜபட்சவுக்கு அதேபோன்ற மக்கள் எழுச்சியை, புரட்சியை, வெறித்தனமான மக்கள் கோபத்தை இப்போது எதிர்கொள்ளும் துரதிருஷ்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எரியும் இலங்கை: காந்தியும் சிலோனும்; நேரடி ரிப்போர்ட்- 12
இலங்கையின் 69 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் மூலம் பெற்ற ஆணை, காலாவதியாகி விட்டது என்பது கண்கூடு. ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் அதிபரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: எரியும் இலங்கை: ஏமாளியாக்கப்படும் இந்தியா; நேரடி ரிப்போர்ட்- 13
இதன் மூலம் ராஜபட்சக்களின் குடும்ப ஆட்சிக்கான வீழ்ச்சி, இங்கிருந்துதான் துவங்குகிறது எனத் தோன்றுகிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.