பினராயி ஆட்சியால் சலிப்பு! மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் : கே.சி. வேணுகோபால்
100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...
கேரளத்தில் பினராயி விஜயன் ஆட்சியால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும், இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஏப். 9) தெரிவித்தார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.
தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
அம்பலபுழாவில் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:
''நாங்கள் (காங்கிரஸ் கூட்டணி) இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறப்போகிறோம். இத்தேர்தலில் நாங்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவோம். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் முதல்வராகத் தொடர்வதால், மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மக்கள் விரோதப் போக்கைக் கொண்ட, ஆணவம் மிகுந்த இந்த முதல்வர் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டுமா? என்பதே இத்தேர்தலில் மக்கள் முன் உள்ள கேள்வி.
ஐயப்பனின் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் குற்றவாளியையும், இக்குற்ற வழக்கையும் மூடிமறைக்க முயன்று வருகிறது. தங்கக் கொள்ளைக் குற்றவாளிகளுக்குத் துணை நின்ற ஒரு அரசாங்கம் தங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் நினைக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.