அரசியல் கட்சிகள் நிதி பெறும் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு மோடி வேண்டுகோள்!
அரசியல் கட்சிகள் நிதி பெறும் விவகாரத்தில் , வெளிப்படைத் தன்மையை நிலை நாட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கான்பூர்: அரசியல் கட்சிகள் நிதி பெறும் விவகாரத்தில் , வெளிப்படைத் தன்மையை நிலைநாட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்ற பேரணியொன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:
தற்போது முடிவடைந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக்கட்சி எம்பி.,க்களிடம் நான் பேசும்பொழுது, அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெறுவது மற்றும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன்.
ஆனால் அவர்கள் பாராளுமன்றம் ஒழுங்காக செயல்படவே விடவில்லை.ஏன் என்றால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவே அவர்கள் விரும்பவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் விரைந்து செயல்படுவதற்கேற்ற அழுத்தம் கொடுக்குமாறு நான் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன். நமது அரசு என்ன முடிவு எடுத்தாலும் அது நாட்டின் நலன் கருதியதாகத்தான் இருக்கும்.
அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவது தொடர்பான சட்டங்களில் மத்திய அரசு எந்த விதமான திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.