நபா சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்டு 900 லைக் வாங்கிய பயங்கரவாதி
பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிறைத் துறை டிஜிபி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குழுவினர், சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள், வெளியில் இருந்த சில சமூக விரோதிகளுடன் செல்போனில் வாட்ஸ்அப் மூலம் பேசிக் கொண்டதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், நபா சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் பலரும், செல்போன் பயன்படுத்தி, சமூக தளங்களில் பதிவு செய்வது, உள்ளிருந்த படியே, வெளியே கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு திட்டம் வகுத்தும் கொடுத்துள்ளனர். இதற்கு எந்த கட்டுப்பாடும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிறையில் இருந்து தப்பித்த குர்ப்ரீத் சிங் சேகான் என்ற பயங்கரவாதி, நவம்பர் 23ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், சிறைச்சாலையில் இருந்தபடியே புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு 900 லைக்குகள் கிடைத்துள்ளன.