முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.

இந்தியா

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.
இஸ்ரேலில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பயங்கரவாதம், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் போன்ற பொதுவான சவால்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக மோடி கூறினார்.
இந்தியப் பிரதமர் ஒருவர், இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலில் அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ரூவன் ரிவ்லினையும் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இரு நாட்டு தொழில் துறையினர் மத்தியிலும், இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் அவர் உரையாற்றவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள யாத் வஷீம் நினைவிடத்துக்குச் சென்று மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார். மேலும், கடந்த 1918- ஆம் ஆண்டு, ஹைபா நகரின் விடுதலைக்காகப் போரிட்டு உயிர்நீத்த இந்திய ராணுவத்தினரின் நினைவிடத்துக்கும் மோடி செல்கிறார்.
இதுதொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் சிறப்பு வாய்ந்த கூட்டாளியான இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறேன். இஸ்ரேல் பிரதமருடன், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் பலனடையும் வகையில், இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளேன்.
இந்திய மற்றும் இஸ்ரேல் தொழில் துறையினரின் கூட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவது, இரு நாடுகளும் கூட்டாக முதலீடு செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இஸ்ரேலின் தொழில்நுட்ப வளர்ச்சியை நேரடியாகப் பார்ப்பதற்கும், இந்தப் பயணம் உதவிகரமாக அமையும் என்று மோடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி, வரும் 6- ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக அங்கு செல்லும் அவர், ஹம்பர்க் நகரில், வரும் 7, 8- ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →