மத்திய அரசின் முரட்டுப் போக்கால் காஷ்மீர் பிரச்னையில் மேலும் சிக்கல்: ப. சிதம்பரம்
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் முரட்டுப் போக்கு காரணமாக அந்தப் பிரச்னையில் சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் முரட்டுப் போக்கு காரணமாக அந்தப் பிரச்னையில் சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு}காஷ்மீர் நிலவரம் குறித்தும், எல்லைப் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்தும்
மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.
இந்த நிலையில், டுவிட்டர் வலைதளத்தில் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதிகள் முரட்டுத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மத்திய அரசும் அதே முரட்டுப் போக்கைக் கடைப்பிடிப்பது, நிலமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இரு முரட்டுத்தன நிலைப்பாடுகளுக்கு இடையில் காஷ்மீர் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
காஷ்மீர் பிரச்னை ஒரு புரையோடியப் புண், அதை பக்குவமாகத்தான் கையாள வேண்டும் என்று ஏற்கெனவே நான் பலமுறை கூறியிருக்கிறேன். மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பலியாவது ஜம்மு}காஷ்மீர் மக்களும், அந்த மாநிலத்தின் எதிர்காலமும்தான் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் ஜம்மு}காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி } பாஜக கூட்டணி அரசுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.