முகப்பு
இந்தியா

பாஜக ஆதரவுடன் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதீஷ் குமார்

பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்று உள்ளார். இதன் மூலம் பிகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

பாட்னா: பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்று உள்ளார். இதன் மூலம் பிகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

பாட்னாவில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து நிதிஷ் குமார் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. ஆனால், அவர் பதவி விலக மாட்டார் என்று லாலு திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து, நிதீஷ் குமார் நேற்று புதன்கிழமை மாலை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் பிகாரில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் - லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த மகா கூட்டணி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, உடனடியாக நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியது. பிகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய், கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இந்த ஆதரவுக் கடிதத்தை அளித்தனர்.

நிதீஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளித்ததை அடுத்து ராஜிநாமா செய்த சில மணி நேரத்திலேயே அவர் மீண்டும் முதல்வராவது உறுதியானது. இதையடுத்து, பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து முடிவும் அறிவிக்கப்பட்டது.

பிகார் சட்டப் பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவையான நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 71 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் 53 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 126 எம்எல்ஏக்களின் ஆதவுடன் இன்று நிதீஷ்குமார் ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சியின்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினரால் பிரச்னை எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தும் திட்டத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் ரத்து செய்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதை அடுத்து பாஜகவுடனான 17 ஆண்டு கூட்டணியை நிதீஷ் முறித்துக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →