கார்த்தி சிதம்பரம் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸ் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட விவகாரம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம்.
புதுதில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட விவகாரம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முந்திய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த பொழுது, ஐ.என்.எஸ். மீடியா என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய நிதி முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் முறைகேடாக பணம் பெற்றதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடுத்துள்ளது.
மேலும் அவர் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததால் அவரை அவரை 'தேடப்படும் நபராக' அறிவித்து, சி.பி.ஐ. 'லுக் அவுட் நோட்டீஸ்' வெளியிட்டது. விசாரணையிலிருந்து தப்ப அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வானது, 'லுக் அவுட் நோட்டீஸுக்கு' தடை விதித்து உத்தரவிட்டது. இது சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது இல்லை என்று கூறி எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்பொழுது தனி நீதிபதி உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது, புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கார்த்தி சிதம்பரம் மீது 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிப்பது குறித்த கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதும், தங்கள் தகுதி மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.