முகப்பு
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஊழல்: சர்வதேச நிறுவன ஆய்வறிக்கையில் தகவல் 

இந்தியாவில் ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக 'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷ்னல் இந்தியா'  என்னும் சர்வதேச நிறுவனத்தின்  ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 11 அக்டோபர், 2018 at 7:20 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:32 PM

புது தில்லி: இந்தியாவில் ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக 'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷ்னல் இந்தியா'  என்னும் சர்வதேச நிறுவனத்தின்  ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷ்னல் இந்தியா'  என்னும் சர்வதேச நிறுவனமானது, பிரபல இணைய குழுமமான 'லோக்கல் சர்க்கிள்ஸ்' உடன் இணைந்து இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது.  அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: 

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 56 சதவீதம் பேர் தங்கள் கடந்த ஓராண்டில் தங்கள் வேலைகளை நிறைவேற்றுவதற்காக லஞ்சம் கொடுத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். கடந்த ஆண்டு இதே கேள்விக்கு 45 சதவீதம் மட்டுமே ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதேநேரம் ஊழல் எதிர்ப்பு தொடர்பான உதவிகளுக்காக தனியான தொலைபேசி எண்  இருக்கிறதா என்ற கேள்விக்கு, 91%  பேர் அப்படி ஒரு தொலைபேசி எண் இல்லை என்றோ அல்லது அப்படி இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியது என்றோ தெரிவித்துள்ளனர். இது ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பல்வேறு மாநில அரசுகளுக்கு இருக்கும் அக்கறையின்மையை காட்டுவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது. 

அதேபோல லஞ்சம் வழங்குவதில் இன்னும் நேரடியாக பணம் வழங்குவதுதான் முதன்மையான வழியாக இருக்கிறது. 39% பேர் அப்படித்தான் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். 25% பேர் முகவர்கள் வழியாகவும், 1% இதர வழிகளில் வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 48% பேர் ஊழலை ஒழிக்க தங்களது மாநிலம் எதுவும் செய்வது இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதுபோல் 41% ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட புதிய சட்டமானது அவ்வளவு வலுவானது இல்லை என்று தெரிவித்துள்ளனர். 63% பேர் இந்த சட்டத்தின் மூலம் அப்பாவிகள் மற்றும் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்படுவது அதிகரிக்கும்  என்றும் தெரிவித்துள்ளனர்       

இறுதியாக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்குத் தொடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற விதிமுறையானது, ஊழலை அதிகரிக்கச் செய்வதாக 49% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.