மல்லையா - ஜேட்லி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மல்லையாவுக்கும் ராகுலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற வகையில் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவித்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மல்லையாவின் கருத்துக்கு அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, அருண் ஜேட்லிக்கும் விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் ராகுல் காந்தியை குறிவைக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரவிஷங்கர் பிரசாத் தெரிவிக்கையில்,
"ராகுல் காந்தி லண்டனில் இருந்து திரும்பிய குறுகிய நாட்களில் விஜய் மல்லையா இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதனால் ராகுல் காந்திக்கும், விஜய் மல்லையாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? லண்டன் செல்வதற்கு முன் ஜேட்லியை சந்தித்ததாக மல்லையா தெரிவித்திருப்பது பொய். உண்மை என்னவென்றால், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவர் ஜேட்லியை சந்திக்க முயற்சித்துள்ளார். ஆனால், வங்கிகளிடம் தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று ஜேட்லி உடனடியாக மறுத்துவிட்டார்" என்றார்.
இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாட்ரா தெரிவிக்கையில்,
"நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிணையில் இருக்கும் ராகுல் காந்தி, அப்பாவி மக்கள் மீது கேள்வி எழுப்பக் கூடாது. விஜய் மல்லையாவுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பை நிரூபிக்க பாஜகவிடம் போதுமான ஆதாரம் உள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை மல்லையா நிர்வகித்து வந்த சமயத்தில் ராகுல் காந்தி இலவசமாக விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
ரிசர்வ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளுக்கிடையில் பரிமாற்றப்பட்ட தொடர்ச்சியான கடிதங்கள் உள்ளன. கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு சோனியா காந்தி தலைமையில் பாகுபாட்டு நோக்கத்துடன் அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தும்" என்றார்.