முகப்பு
இந்தியா

தகவல் திருட்டு விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்கு சிபிஐ நோட்டீஸ்

தகவல் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சிபிஐ திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

Updated On : 17 செப்டம்பர், 2018 at 6:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:17 PM

தகவல் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சிபிஐ திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஃபோஸ்புக்கில் இருந்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த புகாரில், பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஃபேஸ்புக்கில் சுமார் 8.7 கோடி பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகவும், அத்தகவல்கள் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. அதனை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்ட நிலையில், இந்திய பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

Advertisement

அந்த தகவல்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுப்பதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் உதவியதாக கூறப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் 5.62 லட்சம் பயன்பாட்டாளர்களின் விவரங்கள், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் முறைகேடாக பகிரப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் பேசுகையில், 

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மீதான தகவல் திருட்டு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகவல் திருட்டு புகார் தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஆகிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மீதான புகார் உறுதியானால், தகவல் தொழில்நுட்ப சட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, அவைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.