பணக்காரர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் விமர்சனம்
பணமதிப்பிழப்பு பணக்காரர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
போபால்: பணமதிப்பிழப்பு பணக்காரர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அங்குள்ள தசரா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரியஊழல். கடந்த 4ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு அத்தனை சிரமங்களை செய்துவிட்டது.
இந்த பணமதிப்பிழப்பு செயலின் நோக்கமே, சிறு வணிகர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து, நாட்டிலுளள 15 முக்கிய தொழிலதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும் கொடுப்பதுதான்.
பணமதிப்பிழப்பு நடைமுறையில் இருந்தபோது எங்காவது, விஜய் மல்லையா, அனில் அம்பானி ஆகியோர் வங்கியில் வாசலில் வரிசையில் நின்றதை பார்த்திருக்கீர்களா. நேர்மையாக உழைப்பவர்கள், கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சாமானிய மக்கள் மட்டுமே வங்கியின் வாசலில் வரிசையில் காத்திருந்தார்கள்.
வறுமையில் வாடும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளிக்க மறுக்கும் மோடி, அரசு 15 முக்கிய தொழிலதிபர்களுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடனும் தள்ளுபடி செய்யப்படும். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ரூ.70 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
ரபேல் போர் விமானம் குறித்து நான் கேட்கும் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க மறுக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மொபைல் போன்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் மத்தியப் பிரதேசத்தில் கொண்டுவரப்படும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படம்
இவ்வாறு ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசினார்.