பலியா (உ.பி) என்னைத் திட்டாமல் அவர்களுக்கு ஒரு நாள் கூட கடந்து போகாது என்று எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பலியா மாவட்டத்தில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை குறிவைத்து அவர் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எனது தலைமையிலான அரசின் கொள்கைகள் இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றும் எண்ணம் கொண்டவை. அதில் நான் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டுள்ளேன். ஆனால் எதிர்க்கட்சிகள் எப்போது என்னையும் எனது வேலைகளையும் எதிர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. மக்களின் நமபிக்கை என் மீது இருப்பதாக நம்புகிறேன். அதைக் கொண்டு அவர்கள் அனைவரின் முயற்சிகளையும் நான் முறியடிப்பேன்.
இந்த எதிர்க்கட்சிகள் தீவிரவாதம் குறித்தோ, பாகிஸ்தானை விமர்சித்தோ பேசியதில்லை. அவர்கள் எப்போதும் தீவிரவாதிகளை ஆதரிப்பதோடு, பாகிஸ்தானையும் ஆதரித்தே பேசி வருகின்றனர்.
இந்த ஊழல்வாதிகள் சட்டவிரோதமான வகையில் பணத்தையும் சொத்துக்களையும் குவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆடம்பர பங்களாக்களைக் கட்டிக்கொள்வதே அவர்களது அரசியலாகும்.
அவர்கள் மீது விசாரணை முகமைகள் தற்போது நடவடிக்கை எடுக்க இருப்பதால் அவர்கள் தற்போது ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
என்னைத் திட்டாமல் அவர்களுக்கு ஒரு நாள் கூட கடந்து போகாது. ஆறு கட்ட வாக்குப்பதிவுகளுக்கு பின்னால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தின் விளைவே அது. அவர்கள் தங்களது தோல்வியை உணர்ந்து விட்டனர். ஆனால் அவர்களது வசைகளை நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.