முகப்பு
இந்தியா

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன: ராகுல் காந்தி கிண்டல் ட்வீட்!

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

புது தில்லி: பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர், ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே'  என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது.

போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குரிடம் வியாழனன்று செய்தியாளர்கள் கமலின் கருத்து குறித்து கேள்வி கேட்டனர்  அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார்.  இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெள்ளியன்று தனது ட்விட்டர்  பக்கத்தில் கூறியதாவது:

எனக்கு இறுதியாக புரிந்து விட்டது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

கடவுளின் காதலர்கள் இல்லை; கோட்ஸேவின் காதலர்கள்.

இவ்வாறு அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →