தில்லி உணவகத்தில் சாம்பாரில் இறந்த பல்லி: வழக்குப் பதிவு
புது தில்லியில் கன்னௌட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்தில் பரிமாறப்பட்ட சம்பாரில் இறந்த பல்லியைப் பார்த்த வாடிக்கையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புது தில்லி: புது தில்லியில் கன்னௌட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்தில் பரிமாறப்பட்ட சம்பாரில் இறந்த பல்லியைப் பார்த்த வாடிக்கையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, பங்கஜ் அகர்வால், புது தில்லியின் சாந்தினி சௌக்-ன் பதேஹ்புரி பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த தனது இரண்டு நண்பர்களுடன் சென்றார்.
இரவு உணவுக்காக தோசையும், சாம்பாரும் வாங்கினர். அகர்வால் தோசையை உண்ண ஆரம்பித்தபோது, உணவகத்தில் வழங்கிய சாம்பாரில் செத்துப்போன சிறிய பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அதனை தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட அகர்வால், உணவக மேலாளரிடம் இது பற்றி கேட்டார். அதற்கு இதுபோல மீண்டும் நடக்காது என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் குறித்து அகர்வால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உணவகத்தின் சிசிடிவி காட்சிகளையும், உணவு சமைத்தவர் மற்றும் அதில் சேர்க்கப்பட்ட பொருள்களின் விவரங்களையும், உணவகத்தின் உரிமையையும் கேட்டுள்ளனர்.