'மகிழ்ச்சியாக இருங்கள்'.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமாரின் கடிதம்
சிபிஐ முன்னாள் இயக்குநா் அஸ்வனி குமாா், ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
சிம்லா/புது தில்லி: சிபிஐ முன்னாள் இயக்குநா் அஸ்வனி குமாா், ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிம்லா காவல் கண்காணிப்பாளா் மோகித் சாவ்லா தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதியதாகக் கருதப்படும் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், நோய் மற்றும் இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில், நோய் மற்றும் இயலாமை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய பாதையை நோக்கி எனது ஆன்மா தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. எனவே, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவசியம். அதேவேளையில், இறுதிச் சடங்குகளோ, வழிபாடுகளோ எதுவும் தேவையில்லை என்றும் கடிதத்தில் அஸ்வனி குமார் எழுதியிருந்ததாக சஞ்சய் கண்டு ஏஎன்ஐ-யிடம் கூறியுள்ளார்.
அதேவேளையில், அவரது மரணத்தில் காவல்துறைக்கோ, அவரது குடும்பத்துக்கோ எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றும் ஹிமாச்சலப் பிரதேச காவல்துறை தலைவர் சஞ்சய் கண்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ இயக்குநராக பதவியேற்ற அஸ்வனி குமாா், கடந்த 2010-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தாா். இவரின் பதவிக்காலத்தில் தான் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் மாநில அமைச்சராக இருந்தபோது சோராபுதின் ஷேக் போலி என்கவுன்ட்டா் வழக்கில் கைது செய்யப்பட்டாா். கடந்த 2013-2014-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாகலாந்து, மணிப்பூா் மாநில ஆளுநராகவும் அஸ்வனி குமாா் பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.