முகப்பு
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் கோரிக்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் கடந்த மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க 7 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

அதன்படி, கூடுதலாக 63 ரயில்கள் இயக்க தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களும் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதில் ஆந்திரம்- 3, குஜராத் - 1, ஜம்மு காஷ்மீர் - 9, கர்நாடகம்- 6, கேரளம்- 32, தமிழகம் - 10, மேற்கு வங்கம் -2 என்ற எண்ணிக்கையில் கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியுள்ளன. 

முன்னதாக, மாநில அரசுகளின் தேவைக்கேற்ப, கோரிக்கை விடுத்தால்  24 மணி நேரத்திற்குள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 4277க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக சுமார் 60 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாகவும் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.