மீண்டும் கரோனா வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்; இம்முறை மகாராஷ்டிரத்தில்
கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் விரைவு ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன.
புது தில்லி: கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் விரைவு ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. அதுபோல இந்த முறை மகாராஷ்டிரத்தின் சிறிய மாவட்டத்தில் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் கோரப்பட்டுள்ளன.
மிகச் சிறிய மாவட்டமான நந்தூர்பார் பகுதியில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் தேவைக்காக, இந்திய ரயில்வேயிடம் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது.
அங்கு மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
20 பெட்டிகள் அடங்கிய கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகள் தங்கவைக்க வசதி உள்ளது. இதுபோல 90 பெட்டிகளை நந்தூர்பார் நிர்வாகம் கோரியுள்ளது. இதுவரை 21 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.