பாராலிம்பிக்கில் இன்று தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாரா உள்ளிட்ட நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றார்.
இதையும் படிக்க | பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனிக்கு தங்கம்
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'அபராமான விளையாட்டு அவனி லெகாரா. கடின உழைப்பினால் உங்களுக்குத் தகுதியான தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் மீதான உங்கள் ஆர்வம் காரணமாகவே இது சாத்தியமானது. இந்திய விளையாட்டு துறைக்கு இது உண்மையிலேயே ஒரு சிறப்பு தருணம். உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோல இன்றைய போட்டியில் வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்துனியா, ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜாஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோரையும் பிரதமர் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க | பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம்
அவரது ட்விட்டர் பதிவில், 'யோகேஷ் கத்துனியா சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவரது இந்த சிறப்பான வெற்றி வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்'
'தேவேந்திர ஜஜாரியா அபாரமாக விளையாடியுள்ளார். அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தேவேந்திரா இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்'
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு, 'சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெரும் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் விளையாட்டில் காட்டியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாராலிம்பிக்: வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ்க்கு வெள்ளி
முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளியும், வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலமும் வென்றுள்ளனர். இந்தியா இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.