ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"ஆந்திரத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைவரும் சீராக உள்ளனர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது."
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள் இரண்டு பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பியவர்கள் இரண்டு பேர். பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மூன்று பேர். மீதமுள்ள மூன்று பேர் குவைத், நைஜீரியா மற்றும் சௌதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள்.