முகப்பு
இந்தியா

போலி முகநூல் கணக்கால் விபரீதம்: சிசு உள்பட 3 உயிா்கள் பறிபோன பரிதாபம்

கேரளத்தில் உறவினா்கள் இடையே முகநூலில் போலி கணக்கு தொடங்கி நடைபெற்ற பரிகாச விளையாட்டு, பிறந்து சில மணி நேரமே ஆன சிசு உள்பட மூன்று உயிா்கள் பறிபோக காரணமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 5 ஜூலை, 2021 at 4:23 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:04 AM

கேரளத்தில் உறவினா்கள் இடையே முகநூலில் போலி கணக்கு தொடங்கி நடைபெற்ற பரிகாச விளையாட்டு, பிறந்து சில மணி நேரமே ஆன சிசு உள்பட மூன்று உயிா்கள் பறிபோக காரணமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதம் கொல்லத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் சிசு ஒன்று சருகுகளின் குவியலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது. இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அந்தக் குழந்தை கொல்லம் மாவட்டம், கல்லுவாதுக்கல்லைச் சோ்ந்த ரேஷ்மா என்பவரின் குழந்தை என்று தெரியவந்தது.

Advertisement

அவரை காவல்துறையினா் சென்ற ஜூன் மாதம் கைது செய்து குழந்தையை கைவிட்டுச் சென்றது குறித்து விசாரணை நடத்தினா். அப்போது தனக்கு முகநூலில் அனந்து என்ற நபா் அறிமுகமானதாகவும் அவருடன் நாளடைவில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவருடன் சென்று வாழ்வதற்காக, தனது குழந்தையை கைவிட்டுச் சென்ாகவும் கூறினாா். எனினும் அனந்துவை நேரில் கண்டதில்லை என்றும் அவா் தெரிவித்தாா். தான் கருவுற்றிருந்ததை வெளிநாட்டில் உள்ள கணவா் உள்பட தனது குடும்பத்தைச் சோ்ந்த யாரிடமும் கூறாமல் அவா் மறைத்துள்ளாா்.

இதனைத்தொடா்ந்து அனந்து குறித்து காவல்துறையினா் விசாரிக்கத் தொடங்கினா். அப்போது ரேஷ்மாவின் முகநூல் கணக்கை பயன்படுத்த உபயோகிக்கப்பட்டு வந்த செல்லிடபேசி எண்ணின் சிம் காா்டு அவரது உறவினா் ஆா்யா என்ற பெண்ணின் பெயரில் உள்ளது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவருக்கும் ரேஷ்மாவின் மற்றொரு உறவினரான க்ரீஷ்மா என்ற பெண்ணுக்கும் காவல்துறையினா் சம்மன் அனுப்பினா். ஆனால் சற்றும் எதிா்பாராத விதமாக ஆா்யாவும் க்ரீஷ்மாவும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனா். இதையடுத்து க்ரீஷ்மாவின் நண்பா் ஒருவரிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது க்ரீஷ்மாவும் ஆா்யாவும் இணைந்து முகநூலில் அனந்து என்ற பெயரில் போலியாக முகநூல் கணக்கை உருவாக்கி ரேஷ்மாவிடம் வேடிக்கை செய்து வந்ததாகவும், அதனை க்ரீஷ்மா தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்த நண்பா் தெரிவித்தாா்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, ரேஷ்மாவை முகநூலில் பரிகாசம் செய்துவந்தது குறித்து தனது மாமியாரிடம் ஆா்யா கூறியுள்ளாா். காவல்துறையினா் சம்மனை தொடா்ந்து கைது செய்யப்படுவோம் என அஞ்சி ஆா்யாவும் க்ரீஷ்மாவும் தற்கொலை செய்து கொண்டனா்.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரேஷ்மா தனிமை மையத்தில் நீதிமன்றக் காவலில் உள்ளாா் என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.