ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நிஜாம்பேட்டையில் உள்ள ஸ்ரீஸ்ரீ ஹோலிஸ்டிக் மருத்துவமனையின் தரைத்தளத்தில் திங்கள்கிழமை இரவு 11.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு அது மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து அருகில் இருந்த உள்ளூர் மக்கள் அங்குள்ள நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
விபத்து நடந்த போது மருத்துவமனையில் சுமார் 25 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், தீ விபத்தால் அந்த வளாகத்தில் இருந்த பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மின்விபத்து காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.