கோவா, திரிபுராவை விட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துங்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திலீப் கோஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியே கவனம் செலுத்தாமல், மேற்கு வங்கத்திலுள்ள மக்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அவலத்தில் கவனம் செலுத்துங்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி திரிபுராவிற்கு பயணம் மேற்கொண்டது குறித்து பேசிய அவர், வடகிழக்கு பகுதியில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஒன்றும் இல்லை.
திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் கட்சியை வளர்ப்பதை விட்டு மாநிலத்தின் வளர்ச்சி குறித்தும் யோசிக்க வேண்டும். வீட்டு வாசலில் அரசாங்கம் என்ற திட்டத்தை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திரிணமூல் காங்கிரஸ் ரத்து செய்துள்ளது.
திரிபுராவில் பெறுவதற்கு என்று திரிணமூலுக்கு ஒன்றுமில்லை. அவர் (அபிஷேக் பானர்ஜி) ஏன் அங்கு செல்கிறார். இது போன்ற கட்சி இங்கு தேவையில்லை என்பதில் திரிபுரா மக்கள் தெளிவுடன் உள்ளனர்.
மேற்கு வங்கத்திலுள்ள மக்கள் வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்கின்றனர். அவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லாத வகையிலான நடவடிக்கைகளை திரிணமூல் அரசு எடுக்க வேண்டும்.
கோவா, திரிபுராவில் கட்சியை விரிவுபடுத்துவது குறித்து பிறகு யோசிக்கலாம். தற்போது திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார்.