முகப்பு
இந்தியா

பைக்கில் மகனின் உடலுடன் 40 கி.மீ. பயணித்த தம்பதி: என்று மாறும் இந்தநிலை?

மகாராஷ்டிர மாநிலத்தில், பழங்குடியின தம்பதி, தங்களது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் பைக்கில் வைத்துக் கொண்டு வந்த பரிதாப நிலை வெளிச்சத்துக்கு வந்துள்

Updated On : 27 ஜனவரி, 2022 at 6:27 PM
பைக்கில் மகனின் உடலுடன் 40 கி.மீ. பயணித்த தம்பதி: என்று மாறும் இந்தநிலை?
பகிர்:


பல்கார்: மகாராஷ்டிர மாநிலத்தில், பழங்குடியின தம்பதி, தங்களது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் பைக்கில் வைத்துக் கொண்டு வந்த பரிதாப நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த செவ்வாயன்று நிகழ்ந்துள்ளது. 6 வயதாகும் சிறுவன் அஜய், உடல்நலக் குறைவால் ஜவகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.

மருத்துவமனையின் அனைத்து நடைமுறைகளையும் முடித்து, சிறுவனின் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே நள்ளிரவாகிவிட்டது. அதனால், அங்கிருந்து அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பது கடினமாகிவிட்டது. மருத்துவமனையிலிருந்து 40 கி.மீ. பயணித்து தங்களது சடக்வாடி கிராமத்தை அடைய வேண்டும்.

மூன்று ஆம்புலன்ஸ்களும் அந்த கிராமத்துக்கு வர மறுத்துவிட, மருத்துவமனையிலும் அமரர் ஊர்தி இல்லாமல், தனியார் அமரர் ஊர்திகள் கேட்கும் வாடகையைக் கொடுக்க பணமில்லாத தம்பதி நிர்கதியாய் நின்றனர்.

இது குறித்து அந்த மருத்துவமனை மருத்துவர் மரத் கூறுகையில், அவர்களுக்கு உதவ நாங்கள் முன் வந்தோம். தனியார் ஆம்புலன்ஸ்களை விசாரித்தோம். அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க அந்த பெற்றோரிடம் பணமில்லை.

அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டும் எந்த வாகனமும் கிடைக்கவில்லை. அவர்களை காலை வரை காத்திருக்குமாறு கூறினோம். ஆனால், எங்கே உடற்கூராய்வு செய்துவிடுவார்களோ என்று அஞ்சி அவர்கள் அப்போதே புறப்பட ஆயத்தமாகினர். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. விடாப்பிடியாக, அவர்கள் தங்களது பைக்கில் மகனின் உடலை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டனர்.

நாடு முழுவதும் 73வது குடியரசு நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, இந்த பழங்குடியின கிராமம், அந்த 7 வயது சிறுவனின் மறைவால் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தது.

இந்த சம்பவம் மெல்ல மாவட்ட முழுக்கப் பரவிய நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி, சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு சம்பவம்தான் உடனுக்குடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இந்த நிலை அங்கிருக்கும் பல கிராமங்களில் தொடர்கதையாக உள்ளது. வெகு தொலைவிலுள்ள, வனக்கிராமங்கள், மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரிடும் இதுபோன்ற அனுபவங்கள் மிகவும் கவலைக்கொள்ளத் தக்கதுமற்றும் அபாயகரமானது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியோ, மகப்பேறு வசதியோ, செவிலியர்களோ, ஆம்புலன்ஸ் சேவையோ, இதர மருத்துவ வசதிகளோ கிடைப்பதேயில்ல். ஆனால், எந்த அரசும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார் மகாராஷ்டிர மாநில முன்னாள் எம்எல்ஏ.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.