நாட்டில் இதுவரை 3 கோடி சிறார்களுக்கு 2 தவணை தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 3 கோடி சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 3 கோடி சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரை உள்ளோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 15 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு முதல் தவணையாக 5,52,63,296 பேருக்கும், இரண்டாவது தவணையாக 3,01,57,910 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது இந்தியா என்று அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 24.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில்,மொத்தம் இதுவரை 178.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 289 இறப்புகளுடன் 5,921 தொற்றுநோய் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.