முகப்பு
இந்தியா

உடனடியாக நடவடிக்கை எடுங்கள், பஞ்சாப் முதல்வருக்கு தில்லி ஆளுநர் கடிதம்

அறுவடைக்குப் பிந்தைய விவசாயக் கழிவுகளை எரிப்பதால் தில்லியில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைத் தடுக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On : 4 நவம்பர், 2022 at 4:15 PM
பகிர்:

அறுவடைக்குப் பிந்தைய விவசாயக் கழிவுகளை எரிப்பதால் தில்லியில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைத் தடுக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியைப் புகை மண்டலமாக மாற்றி வரும் இந்த செயலைத் தடுக்க  பஞ்சாப் முதல்வர் துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: அறுவடைக்குப் பிந்தைய விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து தெரிந்திருந்தும் தங்களது பொறுப்புகளை மறந்து ஒருவர் மீது மற்றொருவர் பழி கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. இந்த ஆபத்தான சூழலிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எனக்கு குழப்பமாக உள்ளது. பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் தலைநகர் தில்லி புகை மண்டலமாக மாறியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த விஷயத்திற்கு உடனடியாக கவனம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் மாசின் அளவு மிகவும் ஆபத்தான அளவிற்கு அதிகரித்துள்ளது. தில்லியில் ஏற்பட்டுள்ள மாசுக்கு 95 சதவிகிதம் பஞ்சாபில் அறுவடைக்குப் பின் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்து வருவதாக பகவந்த் மான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.