செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 30 லட்சம் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும்: மத்திய அமைச்சர்
30 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
30 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கட்டச்சங்கிலி (பிளாக்செயின்) மற்றும் இயந்திரக் கற்றல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திறம்பட நிர்வாகம் வழங்குவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது: 25 மத்திய பயிற்சி நிறுவனங்கள், 33 மாநில அளவிலான நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மக்கள் சேவை தொடர்பான பயிற்சி நிறுவனங்கள் போன்றன உருவாக்கப்படும். இந்த நிறுவனங்களின் மூலம் 30 லட்சம் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்குள் இந்த தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி செலுத்துவதில் அரசினை ஏமாற்ற நினைப்பவர்களை எளிதில் கண்டறியலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் தரவுகளை பாதுகாப்பாக அனுப்பலாம். இவை அனைத்துமே தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்தி வருகிறது. இதனால் இந்தியா மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. உதாரணமாக ஜன் தன் வங்கி கணக்கு, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டையை அடையாளமாகப் பயன்படுத்துவது, மானியத் தொகையினை நேரடியாக பயனாளரின் வங்கி கணக்கில் செலுத்துவது போன்றன நிர்வாக சிக்கல்களை எளிதாக்கியுள்ளது என்றார்.