ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜைப் பார்த்த சிறுமி, வீட்டுக்குள் இருந்த கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார்.
அங்கேச் சென்ற நாகராஜ், சிறுமியின் கழுத்தை அறுத்தும், அங்கிருந்த ஆசிட்டை எடுத்து அவரது வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைப் பார்த்தும், சிறுமிக்கு உதவுவது போல நகராஜ் நடித்துள்ளார்.
ஆனால் தனது வாயில் ஆசிட் ஊற்றியது நாகராஜ்தான் என்று சிறுமி சைகை மூலம் அக்கம் பக்கத்தினருக்குக் கூறியதைத் தொடர்ந்து, மக்கள் சேர்ந்து நாகராஜைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.