சர்வதேச தலைமை பண்பு விருதுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தேர்வு!
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக்கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு
புதுதில்லி: இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக்கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வரும் 11 ஆம் தேதி வழங்கப்படுகிறது.
இந்தியாவிலும், உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றி வரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதானது, வரும் 11-ம் தேதி நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தில்தான் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 1983 இல் முதுநிலை சட்டப்படிப்பையும் (எல்.எல்.எம்) 1986-இல் நீதித் துறை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி (எஸ்.ஜே.டி) படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார்.
மேலும், இந்த விருது வழங்கும் விழாவில் அந்த கல்வி நிறுவனப் பேராசிரியா் டேவிட் வில்கின்ஸ், தலைமை நீதிபதியுடன் அவர் கலந்துரையாடவும் உள்ளார்.
தாராளவாத மற்றும் முற்போக்கான நீதிபதியாகக் கருதப்படும் நீதிபதி சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்றுள்ளார். அயோத்தி நில வழக்கு, ஆதார் எண், சபரிமலை விவகாரம், கருக்கலைப்பு உள்பட பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமா்வுகளில் நீதிபதியாக அங்கம் வகித்து வந்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கடந்த ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
நவம்பர் 11, 1959 இல் மும்பையில் பிறந்த டி.ஒய். சந்திரசூட், தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்ற இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.1998 இல் மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 இல் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2016 மே 13 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
இவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட் 16 ஆவது தலைமை நீதிபதியாகப் (1978 - 1985) பொறுப்பு வகித்தார். 7 ஆண்டுகள் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றவர். முன்னாள் தலைமை நீதிபதியின் மகன் என்ற பெருமைக்குரியவர் டி.ஒய். சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.