பெங்களூரு: கர்நாடகத்தில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பை குறைப்பது தொடர்பான பரிசீலனைக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த திட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதன்படி, கர்நாடகத்தில் இதுவரை 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானம் விற்பனை செய்வது என்ற வயது வரம்பை அப்படியே வைத்திருப்பது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, கர்நாடகத்தில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பு 21லிருந்து 18 ஆக குறைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் மாநில அரசு கருத்துக் கேட்டிருந்தது.
இதற்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகள் வரப்பெற்றதையடுத்து, மாநில கலால் துறை அமைச்சர் கே. கோபாலைய்யா, மக்களின் கருத்துகளை ஏற்று, மாநிலத்தின் கலால் சட்டம் மற்றும் கலால் விதிமுறைகள் என இரண்டிலுமே வயது வரம்பை 21 ஆக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பல மாநிலங்களில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பு 18 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் இந்த திட்டம் மக்களின் எதிர்ப்பால் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.