மணிப்பூர் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்: பாஜக எம்.எல்.ஏ.க்கள்!
குகி மற்றும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கலாம் என பிரதமருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடிக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
Advertisement
இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் என். பிரேன் சிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மணிப்பூர் மக்கள் அரசுமீது முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிட்டதாக மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ.
பிரதமருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய அரசு மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளனர். தற்போதைய சூழலில் அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது துளியும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.
இதனால், குகி மற்றும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கலாம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.