இது பிரதமரின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்
மணிப்பூர் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
மணிப்பூர் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி வருகின்றனா். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினா் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். மைதேயி சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் இடஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் இதர சாதகமான அம்சங்களை அவா்களிடம் இழக்க வேண்டியிருக்கும் என்று பழங்குடி சமூகத்தினா் கருதுகின்றனா். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வன்முறையாக வெடித்துள்ளது.
மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும் விமர்சனம் செய்தும் வருகின்றன.
இந்நிலையில் மணிப்பூா் நிலவரம் தொடா்பாக விவாதிக்க, ஜூன் 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், 'மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட முதல் நடவடிக்கை இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம். ஆனால், மிகவும் குறைவான, தாமதமான நடவடிக்கை இது. இதுபோன்ற தீவிரமான விஷயத்தில் பிரதமர் கலந்துகொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. தோல்விகளை எதிர்கொள்ள அவர் பயப்படுகிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் உள்துறை அமைச்சராக வந்தபின்னர் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது. அவரது பணியின் கீழ் அமைதியான சூழ்நிலையை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
மணிப்பூரில் பாகுபாடான மாநில அரசு தொடர்வதும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாததும் கேலிக்கூத்தானது' என்று கூறியுள்ளார்.