பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப் படுகொலையை தடுக்க சர்வதேச சமூகத்தால் உடனடியாக போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவது என்பது குறைந்தபட்ச தார்மீக நடவடிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பாலஸ்தீனத்தில் நடந்துவரும் தாக்குதல் மிகக் கொடூரமானது. ஏறத்தாழ ஐந்தாயிரம் குழந்தைகள் உட்பட 10,000 குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூறு குடும்பங்கள் அகதிகளாகிவிட்டன.
இதையும் படிக்க: 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது!
Advertisement
மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. அகதி முகாம்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சுதந்திர உலகின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு நிதி வழங்கி, ஆதரவளித்து வருவது வெட்கக்கேடானது.
குறைந்தபட்ச நடவடிக்கையாக சர்வதேச சமூகம் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். தற்போது இதனைச் செய்யாவிட்டால் எந்தவித தார்மீக அறமும் இல்லாமலாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.