முகப்பு
இந்தியா

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர் நீதிமன்றம்!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On : 20 நவம்பர் 2023, 3:48 pm IST
பகிர்:

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, “சந்திரபாபு நாயுடு நவம்பர் 28-ஆம் தேதி வரையில் இடைக்கால ஜாமீனில் இருக்கிறார். அவருக்கு தற்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.” என்று கூறினார். 

முன்னதாக, உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை அடுத்து, 53 நாட்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்த சந்திரபாபு நாயுடு அக்டோபர் 31-ஆம் தேதி ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

Advertisement

Advertisement

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனையடுத்து சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்குரைஞா்கள் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை அவா் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

அதேபோல், ஜாமீன் காலம் முடிந்து ராஜமகேந்திரவரம் சிறைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நவம்பர் 28-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.