இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினா்களும், எதிராக 2 உறுப்பினா்களும் வாக்களித்தனா். கிட்டத்தட்ட ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொது வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பு இருப்பது சமூகத்தில் ஒட்டுமொத்தமாக பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவுகளில் ஒன்றாக இந்த மசோதா உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!
இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு குறைந்தது 50 சதவிகித மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.