அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு!
சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தொடர்ந்து வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தொடர்ந்து வழக்கை உச்சநீதிமன்றம் இன்று(திங்கள்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சோ்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அது வேலூா் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்தாா்.
Advertisement
இந்த தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தடையில்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், 'நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி' என அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கு நவ. 10ல் விசாரணை!