முகப்பு
இந்தியா

ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் விமர்சனம்

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 17 ஏப்ரல், 2024 at 10:49 AM
ராகுல் காந்தி - DOTCOM
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2024 at 10:25 AM

ஊழலின் சாம்பியன் பிரதமர் நரேந்திர மோடி என்று நாட்டு மக்கள் அறிவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள்(ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்துப் பேசினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

Advertisement

“இந்த தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையேயானது. ஒருபுறம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க நினைக்கிறது. மறுபுறம் இந்தியா கூட்டணியும் காங்கிரஸும் பாதுகாக்க முயற்சிக்கிறது. நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளன. ஆனால், இதனைப் பற்றி பேசாமல் மக்களை பாஜகவும், பிரதமரும் திசைதிருப்புகிறார்கள்.

சில நாள்களுக்கு முன்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி நேர்காணல் அளித்தார். அது திட்டமிடப்பட்ட நிகழ்வு, ஆனால் தோல்வியில் முடிந்தது. தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அரசியலை தூய்மைப்படுத்தவும், வெளிப்படைத் தன்மைக்காகவும் கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். அது உண்மை என்றால் உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்.

வெளிப்படைத்தன்மைக்காக கொண்டு வரப்பட்டது என்றால் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயரை வெளியிடாதது ஏன்?. பணம் கொடுக்கப்பட்ட தேதியை மறைத்தது ஏன்?. உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல், மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழிலதிபர்களும் இதை அறிவார்கள், பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த நினைத்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், பிரதமர் ஊழலின் சாம்பியன் என்று நாட்டில் உள்ளவர்கள் அறிவார்கள்.

அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி முடிவெடுக்கும். அதை பின்பற்றுவேன்.

பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்தேன், ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். அனைத்து மாநிலங்களிலும் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

அதானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே எங்களின் முதல் பணியாக இருக்கும். அதற்காக எங்களின் தேர்தல் வாக்குறுதியில் 23 அம்சங்களை வழங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.