நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!
இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை பற்றி...
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாலை பேசவிருந்தார்.
ஆனால், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மோடி பேசுவதற்கு முன்பே, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மோடி இன்று பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.